Breaking News

கைக்குழந்தையுடன் அலுவலகத்தில் பணிசெய்த மேயர் ஆர்யா ராஜேந்திரன்; அரசாணையை சுட்டிக்காட்டி விவாதம்!

கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக இருப்பவர், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன். கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே தனது 21-ம் வயதில் மேயர் ஆனார்.

பெண்களில், நாட்டின் மிக இளம் வயது மேயர் என்ற பெருமையை பெற்ற ஆர்யா ராஜேந்திரனுக்கும், பாலுச்சேரி இளம் எம்.எல்.ஏ-வான சச்சின் தேவ்க்கும் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருவனந்தபுரம் சி.பி.எம் அலுவலக அரங்கில் திருமணம் நடந்தது.

சச்சின் தேவ் எம்.எல்.ஏ- மேயர் ஆர்யா ராஜேந்திரன்

இந்தத் தம்பதிக்குக் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு துவா தேவ் எனப் பெயர் வைத்தனர். குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில் கைக்குழந்தையுடன் மாநகராட்சி அலுவலகம் வந்து பணிகளை கவனிக்கத் தொடங்கி உள்ளார் மேயர் ஆர்யா ராஜேந்திரன்.

பிறந்து ஒரு மாதமே ஆன கைக்குழந்தையை ஒரு கையால் அணைத்தபடி தனது மேயர் இருக்கையில் அமர்ந்து ஃபைல்களில் கையெழுத்திடுவது போன்ற பணிகளைச் செய்து வருகிறார்.

மேயர் ஆர்யா ராஜேந்திரன் குழந்தையுடன் அலுவல் பணிகளை கவனிக்கும் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது. அவரை பாராட்டியும், அவரது செயலை விமர்சித்தும் கருத்துகள் பதியப்பட்டன.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்குக் குழந்தையை அழைத்துவரக்கூடாது என கேரளா தலைமைச் செயலாளர் 2018-ம் ஆண்டு வெளியிட்ட உத்தரவு மீறப்பட்டதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன்

குழந்தைகளை அலுவலகத்துக்கு அழைத்து வந்தால் அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்படும், தேவையற்ற நேரம் விரயம் ஏற்படும் என ஓர் அமைப்பு மனித உரிமை கமிஷனில் புகார் அளித்ததன் அடிப்படையில் அரசு அலுவலர்கள் குழந்தைகளைத் தனியாக தங்களுடன் அரசு அலுவலகத்துக்கு அழைத்துவரக்கூடாது என அன்றைய தலைமைச் செயலாளர் போல் ஆன்றணி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அந்த உத்தரவை சுட்டிக்காட்டி  சிலர் ஆர்யா ராஜேந்திரனுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தனர். அதே நேரம், அரசு ஊழியர்களுக்குத்தான் அந்த உத்தரவு பொருந்தும் எனவும், மக்கள் பிரதிநிதிகள் அந்த உத்தரவுக்கு உட்பட்டவர்கள் இல்லை என பதில் விவாதமும் எழுந்துள்ளது.

மேயர் ஆர்யா ராஜேந்திரன் கைக்குழந்தைகளுடன் கோப்புகளில் கையெழுத்திடும் காட்சி

பத்தனம்திட்டா கலெக்டராக இருக்கும் திவ்யா ஐயர் தன் கைக்குழந்தையுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன் விவாதத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், இப்போது மேயர் ஆர்யா ராஜேந்திரன் கைக்குழந்தையுடன் மேயர் இருக்கையில் அமர்ந்து பணிகளை கவனிக்கும் போட்டோ விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.



from India News https://ift.tt/j36JxHF

No comments