"பாகிஸ்தானை விட இந்தியா மிகச் சிறந்த கிரிக்கெட் அணி" - கவுதம் காம்பீர்

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை விட இந்தியா வலுவான அணியாக திகழ்வதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியை எதிர்பார்த்து ரசிகர்கள் இப்போதே காத்திருக்க தொடங்கிவிட்டார்கள் என்றால் அது மிகையல்ல.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியுள்ள கவுதம் காம்பீர் "இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மீது எதிர்பார்ப்பு மிக அதிகம். இப்போதைக்கு பாகிஸ்தானைவிட இந்தியா மிக மிக வலிமையான அணி. ஆனால் டி20 போட்டியை பொறுத்தவரையில் எந்த அணியும் எந்த அணியையும் வீழ்த்திவிடும். உதாரணமாக ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ரஷித் கான் போன்ற இளம் வீரர் எந்த அணிக்கும் திடீர் பின்னடைவை ஏற்படுத்துவார். பாகிஸ்தான் இதுபோலவே எந்த அணியையும் சாய்க்கும். ஆதலால், பாகிஸ்தான் அணி மீது இப்போது இருந்தே அழுத்தம் விழத் தொடங்கிவிட்டது" என்றார்.

மேலும் பேசிய அவர் "குரூப் பி-யில் இந்திய அணியுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானும் இருக்கிறது. இந்தத் தொடரில் கணிக்க முடியாத அணியாக, கடும் போட்டியாளராக ஆப்கானிஸ்தான் அணி இருக்கும். ஆதலால், ஆப்கானிஸ்தானைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அந்த அணியில் ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், முகமது நபி போன்ற சிறந்த வீரர்கள் உள்ளதால் எளிதாக நினைக்கக் கூடாது" என்றார் கவுதம் காம்பீர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3szMvtD
via
No comments