ஸ்டாலினை சந்திக்கும் கேரள உயர்மட்டக்குழு! - நல்ல தீர்வு ஏற்படும் என அமைச்சர் நம்பிக்கை
கேரள தொல்லியல்துறை மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவர் கோவில், குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்திருந்தார். கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையை சுற்றிப்பார்த்த அவர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் அங்கு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொல்லியல்துறை இயக்குநர் தினேஷ் மற்றும் அரண்மனை கண்காணிப்பாளர் அஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர் கேரள அமைச்சர் அகமது தேவர் கோவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கொரோனா பரவல் காரணமாக மூடிக்கிடக்கும் பத்மநாபபுரம் அரண்மனையை கொரோனா கட்டுப்பாடுகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வாரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச கேரள அரசின் உயர்மட்டக்குழு சென்னை செல்கிறது. அந்த சந்திப்பின்போது பத்மநாபபுரம் அரண்மனையை திறப்பது குறித்தும் தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறப்படும்.
மேலும் தமிழக - கேரள மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்னைகள் குறித்து அதில் பேச உள்ளோம். கேரளத்தில் நடக்கும் விழிஞ்ஞம் துறைமுகப் பணிகள் உள்ளிட்ட தேவைகளுக்கு 75,000 மெட்ரிக் டன் பாறை கற்கள் தேவைப்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் இருந்து பாறைக் கல் வந்துகொண்டிருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பாறை கல் வருவதில் பிரச்னை இருக்கிறது. அதுபற்றியும் முதல்வரிடம் பேசுவோம். தமிழக முதல்வருடனான சந்திப்பின்போது பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறேன்.
Also Read: தரையில் அமரவைக்கப்பட்ட தமிழக மாணவர்கள்! சர்ச்சையில் பத்மநாபபுரம் அரண்மனை விழா!
தொலை நோக்கு பார்வையுள்ள அரசாக தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு உள்ளது. தமிழக அரசுக்கும் கேரள அரசுக்குமான உறவு பாலமாக பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. இங்கு நடக்கும் விழாக்கள் இரு மாநில உறவுகளையும் வலுப்படுத்தும் விதமாக உள்ளன. உலகத்தரத்தில் தொழில்நுட்ப ரீதியாக பத்மநாபபுரம் அரண்மனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக வேலூர் வி.ஐ.டி பல்கலைகழகம் இதுகுறித்த ஆய்வறிக்கையை வழங்கியுள்ளது. அதுபற்றியும் பரிசீலிப்போம்.
திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவுக்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து அக்டோபர் 3-ம் தேதி சாமி ஊர்வலம் புறப்படுகிறது. கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து நவராத்திரி சாமி ஊர்வலம் நடைபெறும்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/3z3d0tk
No comments