Breaking News

9 துணை வேந்தர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்திய கவர்னர் - நீதிமன்ற உத்தரவால் பரபரத்த கேரள அரசியல்!

கேரள மாநிலத்தில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தராக எம்.எஸ்.ராஜஸ்ரீ நியமிக்கப்பட்டதில் யு.ஜி.சி விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதால் அவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை செயல்படுத்துவதாக கேரளா அரசு கடந்த சனிக்கிழமை கடிதம் மூலம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கேரளா பல்கலைக்கழகம், கோழிக்கோடு, மலப்புறம், கண்ணூர் பல்கலைக்கழகங்கள், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மீன்வளம் மற்றும் கடல்சார் ஆய்வு பல்கலைக்கழகம், ஏ.பி.ஜெ அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஸ்ரீசங்கராச்சார்யா சமஸ்கிருத பல்கலைகழகம் ஆகிய 9 பல்கலை கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனத்திலும் யு.ஜி.சி விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை எனவும், எனவே அவர்கள் திங்கள்கிழமை (நேற்று) காலை 11.30 மணிக்கு முன்பு ராஜினாமா செய்ய வேண்டும் என கேரள கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் உத்தரவிட்டிருந்தார்.

அப்படி அவர்கள் ராஜினாமா செய்யாமல் இருந்தால் துணை வேந்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கவர்னர் அறிவித்திருந்தார்.

பினராயி விஜயன், ஆரிப் முகமது கான்

ஏற்கனவே கேரளாவில் கவர்னர் ஆரிப் முஹம்மதுகானுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்குமான மோதல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே கவர்னரின் இந்த அறிவிப்பால் பரபரப்பு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் நேற்று ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று தீபாவளி விடுமுறையாக இருந்தபோதும் முக்கிய பிரச்னை என்பதால் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தலைமையிலான உயர் நீதிமன்ற பென்ச் மனுக்களை விசாரணைக்கு எடுத்தது.

உயர் நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி ராஜினாமா செய்யும் வாய்ப்பை மட்டுமே துணை வேந்தர்களுக்கு வழங்கியுள்ளதாகவும், மானமுடன் அவர்களாகவே ராஜினாமா செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும், ராஜினாமா செய்யாத நிலையில் பதவியை பறிக்காமல் இருக்க அவர்கள் தரப்பு விளக்கம் என்னவென்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கேரள உயர் நீதிமன்றம்

இதையடுத்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ``சட்டத்துக்கு உட்பட்டு கவர்னர் நடவடிக்கை எடுக்கலாம். விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் துணை வேந்தர்கள் இப்போதைக்கு பதவி விலக தேவையில்லை. வேந்தரான கவர்னர் இறுதி முடிவு எடுக்கும் வரை துணை வேந்தர்கள் தொடரலாம். துணை வேந்தர்களின் அனைத்து வாதங்களையும் கேட்டு கவர்னர் பரிசீலிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. இனி கவர்னர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/c21PUxN

No comments