Breaking News

திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை... பின்னணி என்ன?!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் பா.ஜ.க-வின் செயல்பாடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என, தலைமையே கணிக்க முடியாத அளவுக்கு புதுப்புது சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க-வுடன் கூட்டணியை தொடர டெல்லி மேலிடம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறது. ஆனால் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கள் அ.தி.மு.க உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தூண்டுவது போல பலமுறை அமைந்தன.

அண்ணாமலைக்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எதிர்ப்புகள் அவ்வப்போது கிளம்பிகொண்டே இருக்கிறது. இது ஒருபுறம் என்றால், ஆளுநரின் அரசியல் பேச்சுக்கள் பா.ஜ.க-வுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று வலதுசாரி ஆதரவு கொண்டவர்களே கொதிக்கும் நிலை ஏற்பட்டது. ஆளுநரை திரும்பப் பெறுங்கள் என தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சொல்லும் அதேபாணியில், சில வலதுசாரி ஆதரவாளர்களும் டெல்லிக்கு தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகிறார்களாம்.

அமித் ஷா, ஆர்.என்.ரவி

அதன் தொடர்ச்சியாக, ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலையும் சில கருத்துகளை முன்வைத்தார். தமிழிசை குறித்து கேட்ட கேள்விக்கு அண்ணாமலை சொன்ன பதிலாக இது இருந்தாலும், ஆர்.என்.ரவியை நோக்கியே இந்த பதிலை அவர் சொன்னதாக கமலாலய வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது. தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கும் சமயத்தில் ஆளுநர் எதையாவது பேசிக்கொண்டே சர்ச்சையை வளர்ப்பது, வாக்கு வங்கியை பாதித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அண்ணாமலை இவ்வாறு கூறினார் என்று கமலாலய வட்டாரத்தினர் விளக்கமும் கொடுக்கின்றனர்.

ஆனால், `அ.தி.மு.க குறித்து அண்ணாமலை சொல்லும் கருத்துகளால் அ.தி.மு.க-வின் வாக்குகள் நமக்கு மடைமாறுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆளுநரை இவர் விமர்சிப்பது மட்டும் எப்படி நியாயமாகும்?’ என்றும் பா.ஜ.க-வுள்ளேயே மாறுபட்ட கருத்தும் எழத்தான் செய்தது. `தமிழ்நாட்டில் பா.ஜ.க பெரிதாக வளர்ந்துவிட்டதாக காட்டிக்கொண்டாலும் இன்னும் 10,000 பூத்களுக்கு கூட முழுமையாக ஆட்களை நிரப்ப முடியவில்லை என்பதுதான் எதார்த்தம், அ.தி.மு.க-வை பகைத்துக்கொண்டு எப்படி தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்று அண்ணாமலை சிந்தித்தாரா?’ என்கிற கேள்வியும் பாஜகவினர் மத்தியில் உள்ளது.

இவ்வாறாக அண்ணாமலை, ஆளுநர், அ.தி.மு.க என முக்கோண சர்ச்சை வளர்ந்துகொண்டே சென்ற நிலையில்தான் ஆளுநரின் 5 நாள் டெல்லி பயணம் அமைந்தது. செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் தடாலடியாக அறிவித்து பின்வாங்கியது, செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் அடுத்து செய்ய வேண்டியவை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அரசின் வழக்கறிஞர்களை சந்தித்து ஆர்.என்.ரவி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. அண்ணாமலையின் பேச்சு குறித்தும் ஆளுநர் புகார் வாசித்ததாகவும் கூறப்பட்டது. இதனிடையேதான் ஆளுநர் தமிழ்நாட்டுக்கு திரும்பிய வேகத்தில், அண்ணாமலை டெல்லி அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டில் ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளை கூட ஒத்திவைத்து அண்ணாமலை உடனே டெல்லி சென்றார்.

டெல்லியில் நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு

பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டாவை சந்தித்த அண்ணாமலை பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கிறார். அவர்கள் சொன்ன கருத்துக்களையும் கேட்டு வந்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது. இதுகுறித்து கமலாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, “அ.தி.மு.க கூட்டணியை சுமூகமாக எடுத்துச் செல்வது குறித்தும், அண்ணாமலை தொடங்கப்போகும் நடைப்பயணம் குறித்தும்தான் அதிகம் பேசியிருக்கிறார்கள். செந்தில் பாலாஜி கைது விவகாரத்தால் ஏற்பட்டிருக்கும் தாக்கம், அதை மக்களிடம் தமிழக பா.ஜ.க எப்படி எடுத்துச் சென்றது? தி.மு.க-வினர் மத்திய அரசுக்கு எதிராக திசைதிருப்பும் முயற்சிகள் மக்களிடம் எடுபடுகிறதா என்பது குறித்தெல்லாம் ஜே.பி.நட்டா கேட்டிருக்கிறார். அதற்கு அண்ணாமலையும் விளக்கமளித்திருக்கிறார். ஆளுநர் விவகாரத்திலும் சில கருத்துக்களை அண்ணாமலை சொல்லியிருக்கிறார். தமிழகத்தின் களச் சூழலைப் புரிந்துகொண்டு ஆளுநர் பேசுவதுதான் நல்லது என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்” என்றனர்.

அண்ணாமலை குறித்து ஆளுநர் கூறியதையும், ஆளுநர் குறித்து அண்ணாமலை கூறியதையும் டெல்லி மேலிடம் கேட்டுக்கொண்டதே தவிர வேறெந்த பெரிய ரியாக்ஷனும் இல்லை என்பதுதான் இருதரப்பு வட்டாரங்களிலும் இருந்து கிடைக்கும் பதிலாக இருக்கிறது. டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு ஆளுநரிடம் இருந்து இதுவரை அரசியல் கருத்துக்கள் எதுவும் வெளிப்படவில்லை. ஆனால் அவதூறு வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற அண்ணாமலை dmk files இரண்டாம் பாகம் குறித்தும் அதிரடியாக பேசிவிட்டுச் சென்றார். டி.ஆர்.பாலு சிறைக்குச் செல்லப்போவது உறுதி என்றும் கூறினார். நடைப்பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார். வழக்கம்போல தனது பணிகளைத் தொடர்ந்திருக்கிறார்.

அண்ணாமலை

டெல்லி பயணம் ஆளுநருக்கு சாதகமாக முடிந்திருக்கிறதா அல்லது அண்ணாமலைக்கு சாதகமாக முடிந்திருக்கிறதா என்பது ஒருசில வாரங்கள் கடந்தாலே தெரிந்துவிடப்போகிறது என்கின்றனர் கமலாலய வட்டாரத்தில்.!



from India News https://ift.tt/FVSrCc9

No comments