Tamil News Live Today: திண்டுக்கல்; திமுக நிர்வாகி வீட்டில் 18 மணி நேரம் தொடர்ந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
திண்டுக்கல்: திமுக நிர்வாகி வீட்டில் 18 மணி நேரம் தொடர்ந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தி.மு.க தெற்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் வீரா சாமிநாதன். வெளிமாநிலங்களில் ஃபைனான்ஸ் தொழில் செய்துவரும் இவர், பழநியில் சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்றையும் நடத்திவருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளரான இவர், அவரால் கட்சியில் வளர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் கைதுக்குப் பிறகு அவருக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்ட எல்லையிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்துக்குட்பட்ட வேடசந்தூர் அருகே ஆத்துமேடு கொங்கு நகரிலுள்ள வீரா சாமிநாதன் வீட்டிலும், முத்துபட்டியிலுள்ள அவருக்குச் சொந்தமான தோட்டத்து பங்களாவிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நேற்று மதியம் 2 மணி அளவில் ஒரு பெண் அதிகாரி உட்பட 10 அமலாக்கத்துறை அதிகாரிகள் வீரா சாமிநாதனின் வீட்டுக்கு வந்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் தோட்டத்து பங்களா வீட்டுக்குச் சென்றனர். அங்கும் யாரும் இல்லாததால், மீண்டும் வீட்டுக்கு வந்தபோது வீரா சாமிநாதனின் தாயாரும் அப்போது வந்தார்.
இதையடுத்து, வீட்டுக்குள் சென்று சோதனை செய்யத் தொடங்கினர். அதேபோல ஒரு குழு தோட்டத்து பங்களா வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தியது. நேற்று மதியம் 2:30 மணிக்கு தொடங்கிய சோதனை, சுமார் 18 மணி நேரம் தொடர்ந்திருக்கிறது. வீரா சாமிநாதனின் தோட்டத்து வீட்டில் துப்பாக்கி ஏந்திய மத்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புடன் விடிய விடிய நடந்த சோதனை நிறைவு பெற்றிருக்கும் நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
from India News https://ift.tt/XH2ogrL
No comments