``சனாதனம் ஒழிந்துவிட்டது என்ற செல்லூர் ராஜூவின் தலைக்கு எத்தனை கோடி?" - உதயநிதி கேள்வி
மதுரை மாவட்டத்தில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிறைவாக மாநகரக் கழகம் ஏற்பாடு செய்திருந்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ”தமிழகத்தில் தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக மகளிர் கட்டணமில்லா பேருந்து மூலம் பயனடைந்தனர். மகளிர் உரிமைத் தொகை மூலம் ஆண்டுக்கு 12,000 ரூபாய் கிடைக்கிறது.
பல்வேறு இடங்களில் பெண்களை சந்திக்கும்போது தங்கள் நன்றிகளை தெரிவித்துவருகின்றனர். மதுரையில் தி.மு.க ஆட்சியின் போது கலைஞரால் மதுரை உயர் நீதிமன்றம், மதுரை சர்வதேச விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. தற்போது, முதல்வர் ஸ்டாலின் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் போன்றவற்றை கொண்டுவந்தார்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் 5 நிமிடம் மட்டுமே பேசி இருந்தேன். நான் பேசாத விஷயங்களை பேசியதாக அது உலகம் முழுவதும் பரப்பட்டது. ஆனால், தற்போது, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சனாதனம் எப்போதோ ஒழிந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்தார்கள் என்றால், சனாதனம் ஒழிந்துவிட்டது என்று கூறிய செல்லூர் ராஜூவின் தலைக்கு எத்தனை கோடி வைக்கப் போகிறார்கள்?
இந்த கருத்தை செல்லூர் ராஜூ அவரின் ஓனர் அமித் ஷா மற்றும் மோடியிடம் கூறினால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
நான் சினிமாவிலிருந்து வந்ததால் விஷயம் தெரியவில்லை என்கிற செல்லூர் ராஜூ, எம்ஜிஆர்,ஜெயலலிதா எங்கிருந்து வந்தார்கள் என்று சொல்ல வேண்டும்" என்று பேசினார்.
from India News https://ift.tt/SGIXCMT
No comments