Breaking News

I.N.D.I.A: இந்தியாவை கைப்பற்றுமா? - பாஜகவை வீழ்த்த பெங்களூரில் ஒன்றிணைந்த 26 எதிர்க்கட்சிகள்!

இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்து, வலுவிழந்து தவித்த காங்கிரஸ் கட்சியினர், மீண்டும் வலுப்பெற்று நாட்டை கைப்பற்ற  ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 28 மாநிலங்களில் இமாச்சல், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சி, தொடர்ந்து பல தேர்தல்களில் மரணஅடி வாங்கியதால், காங்கிரஸ் கட்சியின் மேல் இருந்த இறுதி நம்பிக்கையை அவர்கள் கட்சியினரே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல்காந்தி.

கட்சியை வலுப்படுத்த ‘பாரத் ஜோடோ’ யாத்திரை, பேச்சு, பேட்டி, போராட்டம், அறிக்கை என பல வகைகளில் களமிறங்கி, சமீபத்திய கர்நாடகா தேர்தலில் மாபெரும் வெற்றியை பதிவு செய்து கட்சியை உயிர்பித்து காட்டியது காங்கிரஸ்.

கர்நாடகா தேர்தல் முடிந்த கையோடு, அடுத்தகட்டமாக, 2024 மக்களவை தேர்தலுக்கு காய் நகர்த்திய மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, பா.ஜ.கவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட எதிர்க்கட்சிகளை இணைத்து, வலுவான கூட்டணி அமைக்க வியூகம் அமைத்து வந்தனர்.

இந்தியாவை கைப்பற்ற ‘I.N.D.I.A’!

இப்படியான நிலையில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில், கடந்த ஜூன், 23ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில், எதிர்க்கட்சிகளின் முதற்கட்ட கூட்டம் நடந்தது. இரண்டாவது கூட்டம் இருநாட்களாக(ஜூலை 17,18 தேதிகளில்), கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ், தி.மு.க, வி.சி.க, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாடி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா என, 26 கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

பெங்களூரில் நடந்த எதிர்கட்சிகளின் கூட்டம்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் என, வலுவான அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பா.ஜ.கவுக்கு எதிரான தேர்தல் பிரசாரம், தேர்தல் வியூகங்கள் அமைப்பது, வேட்பாளர்கள் தேர்வு மற்றும் பிரதமர் வேட்பாளர் தேர்வு என, பலவற்றை ஆலோசனை செய்தனர்.

பெங்களூரில் நடந்த எதிர்கட்சிகளின் கூட்டம்.

இதுவரை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என, அழைக்கப்பட்டு வந்த காங்கிரஸ் தலைமையிலான எதிரணிக்கு புதிய பெயர் சூட்டியுள்ளனர். இந்தியாவை கைப்பற்ற, I.N.D.I.A – INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE என்ற ‘இந்திய தேசிய வளர்ச்சிக்கான உள்ளடக்கக்கூட்டணி’ என பெயரைச் சூட்டியுள்ளனர்.

எங்கள் அணியை பார்த்து பா.ஜ.கவுக்கு அச்சம்!

நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘நாடு முழுவதிலும் உள்ள வலுவான, 26 எதிர்க்கட்சிகள் இணைந்து, பா.ஜ.கவுக்கு எதிரான மாபெரும் அணியை அமைத்துள்ளோம். இந்த அணிக்கு, I.N.D.I.A - Indian National Developmental Inclusive Alliance என பெயரிட்டுள்ளோம். இந்த அணியை நிர்வகிக்க விரைவில், 11 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும், டெல்லியில் இந்த அணிக்கான, Secretariat அலுவலகம் அமைக்கப்பட்டு அணியின் பணியை துவங்குவோம். அடுத்தகட்ட ஆலோசனைக்கூட்டம், விரைவில் மகாராஷ்டிராவின் மும்பையில் நடத்தப்படும்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.

தற்போது, எங்களின் வலுவான எதிரணியை பார்த்து, பா.ஜ.க கடும் அச்சத்தில் உள்ளது. எங்களுக்கு போட்டியாக இன்று அவர்கள் டெல்லியில், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டியுள்ளனர். இதில், 30 கட்சிகள் பங்கேற்றதாக பா.ஜ.க அறிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில் எங்கே, 30 கட்சிகள் உள்ளது... அதில் எத்தனை கட்சிகள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே சந்தேகமாக உள்ளது,’’ என, பா.ஜ.கவை கலாய்த்தார்.

NDA அணி I.N.D.I.A-வை எதிர்க்க முடியுமா?

நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "பா.ஜ.க தலைமையிலான NDA (தேசிய ஜனநாயக கூட்டணி) அணி முழுமையாக விளம்பரத்துக்கானது. இந்த கூட்டணி இந்தியாவில் முற்றிலும், மோசமான கொடுமையான ஆட்சியைத்தான் நடத்துகிறது. ஆனால், நாங்கள் அமைத்துள்ள I.N.D.I.A அணி விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கானது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

பா.ஜ.க ஆட்சியால் இந்திய மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். எங்கள் அணி பா.ஜ.க பிடியில் இருந்து இந்தியாவை மீட்டு மக்களை காக்கும். NDA அணியே... உங்களால் I.N.D.I.Aவை எதிர்க்க முடியுமா... உங்களுக்கு எதிராக செயல்பட்டால் என்ன... உடனடியாக அமலாக்கத்துறை, CBIயை ஏவிவிட்டு மிரட்டுவதை மட்டுமே உங்களால் செய்ய முடியும்; வேறொன்றும் செய்ய முடியாது,'' என, காட்டமாக பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "பா.ஜ.க ஆட்சியால் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம், அனைத்திலும் விலையுயர்வு என நாட்டுக்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. I.N.D.I.A என்ற அணியின் நோக்கமே, பா.ஜ.கவின் மோசமான சித்தாந்ததுக்கு எதிராக போராடி, இந்தியாவை காப்பது தான். இந்த அணி உருவான நோக்கம், ஏதோ இரண்டு தேசிய கட்சிகளுக்குள் ஏற்படும் தேர்தல் போட்டி அல்ல.

ராகுல் காந்தி.

இந்த அணியின் நோக்கம், பா.ஜ.க கட்சியையும் அதன் மனநிலைக்கும் எதிராக போராடி வெல்வது தான். இந்தியாவின் மக்கள், தொழில்வளம், இளைஞர்கள் என அனைத்தையும் பாதுகாப்பது மேம்படுத்துவது, இந்தியாவின் யோசனை, கலாசாரத்தை காப்பதும் தான் இந்த அணியின் தலையாய நோக்கம். நிச்சயம் பா.ஜ.கவின் ஆட்சியை அகற்றும் எங்களின் I.N.D.I.A அணி," என்றார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘பாட்னாவில் நடந்த கூட்டத்தில், 16 எதிர்க்கட்சிகள் மட்டுமே எங்கள் அணியில் இருந்தன. தற்போது, 26 கட்சிகள் இருப்பதில் இருந்தே, I.N.D.I.A அணி வலுப்பெற்று வருவதை காண முடிகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவை ஆட்சி செய்ய, 9 ஆண்டுகள் வாய்ப்பு கிடைத்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆனால், இந்த ஆட்சிக்காலத்தில் ஒரு அரசு துறையாவது வளர்ந்தது என்று கூற முடியுமா? அவர்கள் அனைத்து துறையையும் தங்களுக்கு தேவையானவர்களுக்கு விற்றுவிட்டனர். இளைஞர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், மக்கள் என, அனைவரும் அதிருப்தியில் உள்ளனர்,’’ எனப்பேசி பா.ஜ.கவை சாடினார்.

பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகள் இணைந்து, I.N.D.I.A அணி உருவானது இந்திய தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணி லோக்சபாவில் வெல்லுமா? இல்லை, அதிகார மற்றும் வேட்பாளர்கள் பங்கீட்டில் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு, தங்களை தாங்களே வலுவிழக்கச்செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.!



from India News https://ift.tt/bYCGexr

No comments