Breaking News

”பாஜக-வை தூக்கி சுமப்பதே அதிமுக-வின் கடமையாக உள்ளது!” - சொல்கிறார் திருமாவளவன்

``அ.தி.மு.க, பா.ஜ.க-வை சுமக்காமல் தனித்து நின்றாலே, அவர்களுக்கு எந்த பாதிப்பும், பின்னடைவும் ஏற்படாது. பா.ஜ.க-வை சுமக்க, சுமக்க அ.தி.மு.க வாக்கு வங்கியை மேலும், மேலும் இழக்க நேரிடும்" என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொல்.திருமாவளவன்

தஞ்சாவூரில் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளைக்கான கட்டடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்ட மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தியது. அதை அனைத்து கட்சியினரும் ஒரு மனதாக ஆதரித்து நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் இது உடனடியாக நடைமுறைக்கு வராத என்பது தான் கவலைக்குறியது.

மக்கள்தொகை கணகெடுப்பு, தொகுதி மறுவரையை முடித்து பின்னர் மகளிருக்கான இட ஒதுக்கீடு சட்டம் செயல்படுத்தப்படும் என்ற வரையறையுடன் இயற்றப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது. பா.ஜ.க-வினர் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் இழிவாகப் பேசுவதையும், நாடாளுமன்ற அவையில் பிறரை பேசவிடாமல் தடுக்கும் வகையில் கூச்சலிடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அ.தி.மு.க, பா.ஜ.க-வின் மோதல் தற்காலிகமான அரசியல் நாடகம். அவர்கள் கூட்டணியை ஒரு போதும் முறித்துக் கொள்ள மாட்டார்கள். அ.தி.மு.க-வை நம்பி பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க-வை நம்பி அ.தி.மு.க உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் தணித்து தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை.

தஞ்சாவூரில் தொல்.திருமாவளவன்

அண்ணாமலை கவனஈர்ப்புக்காக ஆதாரம் இல்லாத ஒன்றை பேசுகிறார். அண்ணாவை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுகிறார். இவை அனைத்தும் அரசியலில் தன்னை பற்றி ஒவ்வொரு நாளும் விவாதிக்க வேண்டும் என்ற உளவியல் சிக்கல் அண்ணாமலைக்கு இருக்கிறது. ஆகவே மனதில் பட்டதை எல்லாம் பேசுகிறார். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க-வில் ஜெயகுமார் போன்றவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து இருக்கிறார்கள். இதனால், கூட்டணி முறிந்து விடும் என யாரும் எதிர்பார்க்க தேவையில்லை.

அ.தி.மு.க, பா.ஜ.க-வை சுமக்காமல் தனித்து நின்றாலே, அவர்களுக்கு எந்த பாதிப்பும், பின்னடைவும் ஏற்படாது. பா.ஜ.க-வை சுமக்க சுமக்க அ.தி.மு.க வாக்கு வங்கியை மேலும், மேலும் இழக்க நேரிடும். யார் சொன்னாலும் பா.ஜ.க-வை துாக்கி சுமப்பதே தங்களின் கடமை என அ.தி.மு.க-வினர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். எனவே, இந்த இடைக்கால மோதல், முரண்கள் தமிழக அரசியலிலும், கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது.

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்

காவிரி மேலாண்மை வாரியம் ஆணையிட்டது போன்று காவிரியில் 5,000 கன அடி தண்ணீரை திறக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். எங்களின் கோரிக்கையில் இருந்த நியாயத்தை உணர்ந்துகொண்ட மத்திய அமைச்சர், காவிரி மேலாண்மை வாரிய தலைவருக்கு உத்தரவிட்டார். ஆனால் போதிய மழை இல்லாததால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க முடியாது என வழக்கு போட்டது. அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கர்நாடகவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதில் ஒன்றிய அரசு விரைந்து தலையிட வேண்டும், கர்நாடக மாநிலத்தில் உள்ள பா.ஜ.க ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு எதிராக இல்லை என காட்டிக்கொள்கிறது. இந்த இரட்டை போக்கு பா.ஜ.க-விடம் வெளிப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

எனவே, தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் வழிகாட்டியுள்ளதுபடி, 25 ஆயிரம் கன அடி தண்ணீர் தருவதற்கு ஒன்றிய அரசு அழுத்தத்தை தர வேண்டும். அகில இந்தியளவில், நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும்" என்றார்.



from India News https://ift.tt/BmCYzsu

No comments