சென்னை செஸ் ஒலிம்பியாட் : இந்திய வீரர்களுக்கு ஜூன் மாதத்தில் பயிற்சி போட்டிகள்!

இந்தியா சார்பாக ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கவுள்ள அணி வீரர்களுக்கு ஜூன் மாதத்தில் பயிற்சி போட்டிகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அணியின் கிராண்ட்மாஸ்டர் ஷ்யாம் சுந்தர் தெரிவித்துள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்களுக்கான முதல் பயிற்சி முகாம் சென்னையில் கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஆன்லைன் முறையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வந்தன.

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் இம்முறை சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெறவுள்ளது. ஒலிம்பியாட் தொடரில் தங்க பதக்கத்தை வெல்ல கிராண்ட்மாஸ்டர்கள் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் போரிஸ் ஜெல்ஃபாண்ட் இந்திய வீரர்களுக்கு ஒரு நாளுக்கு 7 மணி நேரம் பயிற்சி வழங்கி வருகின்றனர்.
போட்டியின் வெள்ளை காய்களை வைத்து இருந்தால் முதல் நகர்வுகளை எப்படி மேற்கொள்ள வேண்டும்?, கருப்பு காய்களுடன் போட்டியை துவங்கினால் எப்படி நடத்த வேண்டும் என்பது துவங்கி செஸ் ஒலிம்பியாட் போன்ற தொடர்களில் கிளாசிக் முறைகளில் போட்டிகள் நடைபெறுவதால் 4 மணி நேரம் வரை போட்டிகள் நீடித்தாலும் கவனம் சிதறாமல் போட்டியில் எப்படி கவனம் செலுத்துவது, ஆட்டத்தில் தோல்வி அடையாமல் டிரா செய்ய என்ன செய்ய வேண்டும், செஸ் போட்டிகளில் புதிய நகர்வுகள் என ஒவ்வொரு வீரர்களின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

“தற்போது இந்திய அணியில் இருக்கக்கூடிய வீர்ரகள் அனைவரும் தொடர்ச்சியாக பல தொடர்களை விளையாடி வருகின்றனர். தற்போது முதல் பயிற்சி முகாம் நன்றாக செல்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் மேலும் பயிற்சி முகாம்கள் நடைபெறவுள்ளது. ஜூன் மாதத்தில் அனைத்து வீரர்களுக்கும் பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டு அவர்கள் என்ன தவறு செய்கிறார்கள்? என்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்? என்பதை கண்டறிந்து மாற்ற உதவியாக இருக்கும் என பயிற்சியாளர் ஷ்யாம் சுந்தர் தெரிவித்தார்.

“செஸ் ஒலிம்பியாட் தொடர் இந்தியாவில் நடத்த வேண்டும் என முடிவு செய்தவுடன் வேகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டோம். தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருந்தது. பயிற்சி முகாம்களை பொறுத்தவரை வீரர்கள் தங்களின் பலம் பலவீனம் குறித்து தெரிந்து கொள்வதை விட அணியில் இருக்கக்கூடிய வீரர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முக்கியமாக உள்ளது என்றும் பெரும்பாலான போட்டிகளில் வீரர்கள் தனியாக விளையாடி வரும் சூழலில்., அணியாக விளையாட இதுபோன்ற பயிற்சி முகாம் உதவிகரமாக உள்ளது” என அகில இந்திய செஸ் கூட்டமைப்பு செயலாளர் பரத் சிங் சௌகான் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/JY4g5df
via
No comments