”ரொனால்டோ மீது அரசியல் தடை விதிக்கப்பட்டது! அவரை வீணடித்தனர்” - துருக்கி அதிபர் பேச்சு
உலகக் கோப்பையில் ரொனால்டோவுக்கு அரசியல் ரீதியாக தடை விதிக்கப்பட்டது என்றும், அவரை வீணடித்தனர் என்றும் கூறியுள்ளார் துருக்கி அதிபர் எர்டோகன்.
உலகக் கோப்பை காலிறுதியில் மொராக்கோவிடம் போர்ச்சுகல் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ லாக்கர் அறைக்குச் சென்றபோது கண்ணீர் விட்டு அழுதார்.
போர்ச்சுகல் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் முடிவடைந்த FIFA உலகக் கோப்பை 2022 இல் மறக்க முடியாத ஒரு போட்டியைக் கொண்டிருந்தார். 37 வயதான அவர் ஐந்து வெவ்வேறு உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் மனிதர் என்ற பெருமையை இந்த உலகக்கோப்பையில் சேர்த்திருந்தார். ஆனால் அவருக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதியான முடிவால் உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற அவருடைய கனவு கிட்டத்தட்ட சிதைந்தே போய்விட்டது.
உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்டுள்ள ரொனால்டோ, தென் கொரியாவிற்கு எதிரான போட்டியின் போது மோசமான அணுகுமுறையைக் காட்டியதற்காக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அது ஒருவீரரின் சாதாரன ஒன்றாக கருதப்படாமல், அதை காரணமாக வைத்தே பின்னர் நாக் அவுட் போட்டிகளில் சுவிட்சர்லாந்து மற்றும் மொராக்கோவிற்கு எதிராக பெஞ்ச்சில் அமர வைக்கப்பட்டார்.
மேலும் உலகக் கோப்பை காலிறுதி போட்டியில் மொராக்கோவிற்கு எதிரான போட்டியில் போட்டியின் 60 நிமிடங்கள் வரை களமிறக்கப்படாமலேயே அமர வைக்கப்பட்டிருந்தார் ரொனால்டோ. பின்னர் அவர் களத்திற்கு வந்தும் ஏதும் செய்ய முடியாமல் போனது. இறுதியில் மொராக்கோவிடம் போர்ச்சுகல் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. போட்டிக்கு பிறகு ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் ஆட்டத்திற்குப் பிறகான முதல் இணையதள பதிவில், போர்ச்சுகலுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவு முடிந்துவிட்டதாகவே தெரிவித்தார்.
இந்நிலையில், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், ரொனால்டோவுக்கு ஆதரவாக, ”உலகக் கோப்பையில் அவர் "அரசியல் தடைக்கு" உட்பட்டதாகக் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை கிழக்கு எர்சுரம் மாகாணத்தில் இளைஞர் நிகழ்வில் பேசும்போது ரொனால்டோ குறித்து பேசியிருக்கும் அவர், “ரொனால்டோவை வீணடித்துவிட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் அவருக்கு அரசியல் தடை விதித்துள்ளனர். போட்டி முடிய மீதம் 30 நிமிடங்களே உள்ள நிலையில் ரொனால்டோ போன்ற ஒரு கால்பந்து வீரரை ஆடுகளத்திற்கு அனுப்பியது அவரது உளவியலைப் பாழாக்கியது மற்றும் அவரது ஆற்றலைப் பறித்தது" என்று கூறியுள்ளார்.
மேலும் ரொனால்டோ பாலஸ்தீனத்திற்காக ஆதரவாக நிற்பவர் என்றும் கூறியுள்ளார்.
போட்டிக்கு பிறகு பேசிய ரொனால்டோ, முக்கியமான முடிவு எடுக்கவேண்டிய நேரம் என்று குறிப்பிட்டிருந்தார். மற்றும் ரொனால்டோ இன்ஸ்டாகிராமில், "அடிப்படையாக நடந்துகொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று ரொனால்டோ எழுதினார். நிறைய பேசப்பட்டது, நிறைய எழுதப்பட்டுள்ளது, நிறைய ஊகிக்கப்பட்டது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் போர்ச்சுகல் மீதான எனது அர்ப்பணிப்பு ஒரு போதும் அசையவில்லை. நான் எப்பொழுதும் இன்னும் ஒரு (போர்த்துகீசியம்) எல்லோருடைய இலக்குக்காகவும் போராடி வருகிறேன். எனது அணியினரையோ அல்லது எனது நாட்டையோ நான் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன்.” என்று பேசியிருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/spTBURI
via
No comments