Breaking News

``திமுக கூட்டணி என்பது ஆண்டான் - அடிமை கூட்டணி..!” - சொல்கிறார் இராம ஸ்ரீநிவாசன்

``திமுக கூட்டணியை போல வலுவாக உங்களது கூட்டணி இல்லையே, ஏகப்பட்ட முரண் இருக்கிறதே?”

``தி.மு.க கூட்டணி என்பது ஆண்டான் அடிமை கூட்டணி. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தி.மு.கவின் அடிமை கட்சிகள். ஆண்டானுக்கு அடிமைகளுக்கு எப்போதும் ஒற்றுமை இருக்கும். தி.மு.க சொல்வதை அவர்கள் கேட்டுக் கொண்டு இருப்பார்கள். பேரறிவாளனை ஸ்டாலின் கட்டியணைத்தபோது காங்கிரஸ் என்ன செய்தது. வாயில் கருப்பு துணியைக் கட்டிக் கொண்டு பத்து நிமிடம் ரோட்டில் உட்கார்ந்திருந்தார் கே.எஸ் அழகிரி. அவ்வளவுதானே. காங்கிரஸ் அடிமைக்கட்சி என்பதற்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும். ஆனால் எங்கள் கூட்டணி சுய ஆளுமை கொண்டவர்கள், சுய மரியாதை கொண்டவர்கள். மாற்றுக் கருத்துகளை பேசத்தான் செய்வார்கள்.”

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

``தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது யாரெல்லாம் இருக்கிறார்கள்? பா.ம.க இருப்பதாகவே தெரியவில்லையே..?”

``நாங்கள் கூட்டணியைவிட்டு வெளியேறுகிறோம் என அந்தந்த கட்சிகள் அறிவிக்கிற வரைக்கும் அவர்கள் கூட்டணியில்தான் இருக்கிறார்கள். பாமக எங்காவது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்களா.... கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தினசரி நாங்கள் கூட்டணி இருக்கிறோம் என சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஒருமுறை திருமணம் ஆகிவிட்டால் விவகாரத்து வாங்கும்வரை அவர்கள் கணவன் மனைவிதான்.”

``கூட்டணி பற்றி கேட்டதற்கு, தேர்தல் வரட்டும் பார்த்துக்கலாம் என்று தானே எடப்பாடி சொல்கிறார்?”

``ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணியில் இருந்துதான் தேர்தலை சந்தித்தது. அதன்பிறகு இருகட்சியினரும் நாங்க கூட்டணியில் இல்லை என அறிவித்துக் கொள்ளவில்லையே. தேர்தல் வரட்டும் பார்த்துக்கலாம் என்றே தானே எடப்பாடி சொல்கிறார்.. தேர்தல்வரை கூட்டணி இல்லை எனச் சொல்லவில்லையே.”

அண்ணாமலை - தமிழ்நாடு ஆளுநர்

”ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்கிறார் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இது பொருந்துமா?”.

``அண்ணாமலை சொன்னது யதார்த்தமான கருத்து. ஆளுநர்கள் கட்சி அரசியல் பேசக்கூடாது. தி.மு.க ஆட்சி சரியில்லை என கட்சி ரீதியாக பொதுவெளியில் ஆளுநர் பேசக்கூடாது. ஆனால் திராவிடம் சனாதனம் குறித்து ஆளுநர் பேசுவது பொது அரசியல், சிந்தாந்த அரசியல். அதனை ஆளுநர்கள் பேசலாம்.”

``அண்ணாமலை பங்கேற்கும் கூட்டத்தில் அ.தி.மு.க பிரமுகர் முன்னிலை வகித்ததற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறாரே..?”

``தாயும் பிள்ளையும் ஒன்றுதான் என்றாலும் வாயும் வயிறும் வேறுதான். அந்த நடவடிக்கையில் தவறில்லை என்றே பார்க்கிறேன். இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு முன் கட்சிக்கு தகவல் கொடுத்தாரா... இல்லையா எனத் தெரியவில்லை. நான் பா.ஜ.க-வில் இருந்து கொண்டு பெரிய விழா நடத்துகிறேன். அ.தி.மு.க தலைவர்களை அழைக்கிறேன். ஆனால் எங்கள் கட்சிக்கு தகவல் சொல்லவில்லை என்றால் எங்கள் கட்சிக்கு என்மீது வருத்தம் இருக்குமே. அப்படித்தான் இதனையும் பார்க்க வேண்டும்.”

ராம ஸ்ரீனிவாசன்

``பொதுசிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என கருத்து நிலவுகிறதே?”

``முதலில் பொது சிவில் சட்டம் மத நம்பிக்கைகளில் தலையீடுவதில்லை. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, வாரிசு போன்ற விவகாரங்களில் பொதுவான அணுகுமுறைகள் இருக்க வேண்டும். திருமண வயது என்பது ஏன் இந்துக்களுக்கு ஒன்றாகவும் முஸ்லீம்களுக்கு ஒன்றாகவும் இருக்க கூடாது. பெண்ணுகளுக்கான சொத்துரிமை தரவேண்டும் என்ற உரிமை இந்து பெண்களுக்கு மட்டும்தானே. இஸ்லாமிய பெண்களுக்கு பொருந்துமா, கிறிஸ்துவர்களுக்கு பொருந்துமா... பொருந்தாது தானே... தி.மு.க கொண்டுவந்த சட்டத்தையே மத பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால்கூட பொது சிவில் சட்டம் அவசியம்.”

``உங்கள் வாதத்தை கூட்டணி கட்சியான அ.தி.மு.க ஏன் புரிந்துகொள்ளவில்லை?”

``பொதுசிவில் சட்டம் கிறிஸ்தவ இஸ்லாமியர்களுக்கு எதிரானது என தவறான கருத்து பரப்பரப்படுகிறது. ஆகவே அ.தி.மு.க இதில் ஆதரவு நிலைப்பாடு எடுக்க பயப்படுகிறது. இந்த சாலையில் போனால் பேய் வரும் என்றால் ஆராய்ச்சி செய்யாமல் நம்பிவிடுவதுபோல அ.தி.மு.கவும் நம்புகிறது.”

மல்லிகார்ஜுன கார்கே - ராகுல் காந்தி - காங்கிரஸ்

``ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறதே?”

``ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராவதையே கட்சி தொண்டர்கள் விரும்பவில்லை. இதில் ராகுலை பிரதமராக முன்னிறுத்தினால் யார் வாக்களிப்பார்கள். முதலில் அந்த கூட்டணியே தேர்தல் வரை இருக்காது கரைந்துதான் போகும்.”



from India News https://ift.tt/8hmcjDk

No comments