Breaking News

அமித் ஷா-வுடனான சந்திப்புக்கு பின்னும், அதிமுக-வை சீண்டும் தமிழக பாஜக - நடந்தது என்ன?!

அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணியில் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்களே தவிர அதற்கான எந்தவொரு அம்சங்களும் தென்படவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க தலைவராகப் பதவியேற்ற அண்ணாமலை தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தவர், காலப்போக்கில் அ.தி.மு,க-வையும் அவ்வப்போது தொட ஆரம்பித்தார். ``ஆரம்பத்தில் நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி, தி.மு.க-வுக்கு மாற்று நாங்கள் தான்” என அ.தி.மு.க-வை சீண்டிய அண்ணாமலை, ஒரு கட்டதில் அடுத்த தேர்தலில் கூட்டணியில் அ.தி.மு.க இருந்தால் பா.ஜ.க மாநில தலைவர் பதவியே ராஜினாமா செய்வேன் என்ற அளவுக்கு வெடித்தார்.

அண்ணாமலை

தொடர்ச்சியாகச் சீண்டி வரும் அண்ணாமலைக்கு செக் வைக்கும் விதமாக பா.ஜ.க ஐடி விங் தலைவர் நிர்மல் குமாரை அ.தி.மு.க தன்பக்கம் இழுத்துக் கொண்டது. மோதல் தொடர்ந்த வேளையில் 2023 ஏப்ரல் 14-ஆம் தேதி தி.மு.க-வின் சொத்துப் பட்டியலை வெளியிட்டது போலவே அ.தி.மு.க-வின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என சூசகமாக அறிவித்தார் அண்ணாமலை. இதற்கு பிறகும் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒரே கூட்டணியில் எப்படிப் பயணிக்கப் போகிறார்கள். கூட்டணி உடைவது கிட்டதட்ட உடைவது உறுதி என்கிற அளவுக்கு சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வந்த நிலையில் அ.தி.மு.க பா.ஜ.கவுக்கு இடையேயான கருத்து மோதல்களும் அனல் பறந்தன.

அண்ணாமலை

இதனிடையே அண்ணாமலை குறித்த கேள்விகள் எழுந்தபோதெல்லாம் எடப்பாடி, “முதிர்ச்சியடைந்த அரசியல் தலைவர் குறித்துக் கேளுங்கள், எங்க அரசியல் அனுபவம் என்ன.. அவரோடு அனுபவம் என்ன?” என அண்ணாமலையை லெப்ட் ரைட் வாங்கினார்

டெல்லி பயணம் - அமித் ஷா பஞ்சாயத்து

ஏப்ரல் 26-ம் தேதி துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என பெரும் படையுடன் அமித் ஷா-வை டெல்லி வரை சென்று சந்தித்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அண்ணாமலையின் செயல்பாடுகள், அ.தி.மு.க-விற்கு எதிராகச் செயல்படும் தமிழ்நாடு பா.ஜ.க என குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் எடப்பாடி.

எடப்படி பழனிசாமி, அமித் ஷா

`இதனால் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பு ஏற்படுகிறது, நாங்கள் எதிர்க்கட்சியாகச் செயல்படவே தமிழ்நாடு பா.ஜ.க தடையாக இருக்கிறது’ என்பதையும் அடிக்கோடிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அதனைக் கேட்டுக்கொண்டு அமித் ஷா,

உடனடியாக அண்ணாமலையை அழைத்து அமர வைத்துள்ளார். ”பழைய கதையை விடுங்கள், தேர்தலுக்குக் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான், தி.மு.க-வை எதிர்கொள்ள முடியும்' எனச் சமரசம் செய்திடும் விதமாகப் பேசி அனுப்பி வைத்துள்ளார் அமித் ஷா.

பி.ஜே.பி எஸ்.ஆர் சேகர்

மீண்டும் சீண்டும் பாஜக

முதிர்ச்சியடைந்த அரசியல் தலைவர்கள் பற்றிக் கேளுங்கள் என அண்ணாமலையை முன்பு கடிந்துகொண்ட எடப்பாடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திப்புக்குப் பிறகு ``எங்களுக்கும் அண்ணாமலைக்கு எந்த தகராறும் இல்லை” என அந்தர் பல்டி அடித்தார். அமித் ஷா இருதரப்பையும் அழைத்து பஞ்சாயத்து செய்து வைத்துவிட்டார், ஆகவேதான் எடப்பாடி இவ்வாறு பேசுகிறார். அண்ணாமலையும் தமிழ்நாடு பா.ஜ.க-வும் அ.தி,மு.க எதிர்ப்பில் சைலண்ட் மோடிற்குச் செல்வார்கள் என்றெல்லாம் பலரும் பேசி வந்த நிலையில் தற்போது மீண்டும் சீண்டியிருக்கிறது தமிழ்நாடு பா.ஜ.க.

``பா.ஜ.க வாங்கும் இடத்திலும் இல்லை, அ.தி.மு.க கொடுக்கும் இடத்திலும் இல்லை. ஆறாக உடைந்து கவர்ச்சிகரமான தலைமையே இல்லாத அ.தி.மு.க-வுடன் 25 சீட்டுகள் கொடுத்தால்தான் கூட்டணி... இல்லையேல் பா.ஜ.க தலைமையில் தனிக் கூட்டணி" என சமூக வலைதளத்தில் பதிவிட்டார் பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர். அமித் ஷா அறிவுறுத்தலுக்கு பிறகும் பா.ஜ.க பிரமுகர்கள் இவ்வாறு பேசுவது அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளைக் கிளப்பியுள்ளன.

ஜெயக்குமார்

எச்சரிக்கும் ஜெயக்குமார்

இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், அண்ணாமலை சொல்லி இப்படியெல்லாம் சொல்லுகிறாரா... இல்லை அண்ணாமலை சொல்லாமல் சொல்கிறாரா... அதுதான் இப்போது கேள்வி. `பகிரங்கமாக எங்களின் பொருளாளர் எனக்குத் தெரியாமல் செய்தி போட்டிருக்கிறார். அது தவறு, அவரைக் கண்டிக்கிறேன்' என்ற கருத்தை ஊடகங்களுக்கும் அண்ணாமலை தெரிவிக்க வேண்டும்.

அப்போதுதான் அண்ணாமலை மீது எங்களுக்குச் சந்தேகம் இருக்காது. இல்லையென்றால் அண்ணாமலை சொல்லித்தான் சொல்கிறார் என்று நாங்கள் நினைக்க வேண்டியிருக்கும்" எனக் கடிந்து கொண்டார். தொடர்ந்து ”எங்களுக்கும் எதிர்வினையாற்றத் தெரியும்” என எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

என்ன செய்யப் போகிறது அ.தி.மு.க?

அ.தி.மு.க தனது உட்கட்சி விவகாரத்தையும் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுடன் மோதுவதையுமே முழு நேரப் பணியாகச் செய்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க பொதுச் செயலாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தான் ஒரு எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க ஒரு எதிர்க்கட்சி என்பதை மறந்துவிட்டாரோ என்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அ.தி.மு.க-வின் செய்தி தொடர்பாளர்கள் தி.மு.க-வின் செயல்பாடுகளை விமர்சிப்பதை விட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தை விமர்சிப்பதிலும் தான் கவனம் செலுத்துகிறார்கள் என்ற விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எடப்பாடி பழனிசாமி

உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திப்புக்குப் பிறகு பா.ஜ.க - அ.தி.மு.க விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிய நிலையில் பா.ஜ.க மீண்டும் நெருப்பைப் பற்ற வைத்திருக்கிறது, அதற்குப் பதில் விமர்சனம் செய்கிறது அ.தி.மு.க தரப்பு. தொடர்ந்து தங்களைச் சீண்டி வரும் தமிழ்நாடு பா.ஜ.க-வை என்ன செய்யப்போகிறது... கூட்டணி பிரச்னைக்கு முடிவுக்கட்டி எதிர்க்கட்சியாகத் தனது பங்களிப்பை முறையாக ஆற்றுமா அ.தி.மு.க? பொறுத்திருந்து பார்ப்போம்!



from India News https://ift.tt/De07vfN

No comments